புல் தின்ற கல்நந்தி!

நமசிவாய, நமசிவாய’ என்று உச்சரித்தபடியே ஓடிவந்த அந்தணரைத் தடுத்து நிறுத்தினார், ஹரதத்தர். அவர் தன்னை சிவபிரானிடம் ஆத்மார்ப்பணம் செய்துவிட்ட மஹா புருஷர்! அவர் கேட்டதும் திணறலுடன் பேசினார் வந்தவர்.

“ஸ்வாமி, கவனப்பிசகாக, பெரும் புல்லுக்கட்டை பசுங்கன்றின் மேல் போட்டுவிட்டேன். அது மாண்டுவிட்டது. ஐயோ, ‘கோஹத்தி’ பெரும் பாவமாயிற்றே. என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறேன்!”

சொல்லி முடித்த வினாடியில், ‘நமசிவாய’ மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தார். அதைக் கவனித்த ஹரதத்தர் சொன்னார்:

“அறியாமல் நடந்த அந்த தோஷம், ‘நமசிவாய’ நாம ஜபத்தால் நீங்கிவிட்டது. கவலையை விடும்”

அவர் முடிக்கும் முன்பே, உரக்க ஒலித்தன பலகுரல்கள்:

“அதெப்படி நீங்கும்? நாங்கள் எப்படி நம்புவது?”

மஹாபுருஷரான ஹரதத்தர் கோபப்படவில்லை. அந்த அந்தணரிடம் சொன்னார்: “போய் காவிரியில் நீராடும். பிறகு, ஒரு புல்லுக்கட்டை கொண்டு வந்து, இந்த நந்தியின் முன் போடும். அது சாப்பிடும். உம்முடைய தோஷம் நீங்கியதை உணர்ந்துகொள்ளும்.”

அதைக்கேட்ட அனைவரும் சிரித்தார்கள். காரணம், அவர் காட்டியது கல் நந்தியை!

அவரது வார்த்தையில் நம்பிக்கை வைத்த அந்தணர், காவிரியில் நீராடினார். புல் கட்டை கொண்டு வந்து நந்திமுன் வைத்து கைகூப்பி வணங்கினார். மறுகணம், அந்தக் கல்நந்தி உயிர் பெற்றது. அந்தப் புல்லை மென்று தின்ன ஆரம்பித்தது. அனைவரும் பிரமித்துப்போனார்கள்.

கி.பி. பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்தது இந்தச் சம்பவம்! நடந்த இடம், கஞ்சனூர். ‘சுக்கிர ஸ்தலம்’ என்றால், பலருக்கும் புரியும். அக்னீஸ்வரர் என்ற பெயருடன் பெருமானும், கற்பகாம்பிகை என்ற பெயருடன் தேவியும் இங்கே அருள்பாலிக்கின்றனர். நர்த்தன விநாயகர், தட்சிணா மூர்த்தி, நடராஜர், துர்கை, சண்டிகேஸ்வரர் என, பல்வேறு சன்னிதிகளைக் கொண்ட இந்தக் கோயிலின் தலவிருட்சம் பலாசமரம். நாவுக்கரசர் பெருமானின் பாடல் பெற்ற தலம் இது.

ஜாதக ரீதியாக சுக்கிரன் வலுப்பெறாமல் இருந்தால், குடும்ப வாழ்க்கை அமைவது தள்ளிப்போகும் அல்லது தடைப்படும். மக்களை கவரும்படியான வளையல், துணி வகை... போன்ற தொழில்களில் ஈடுபடுவோருக்கும் சுக்கிரனின் அருள் அவசியம். ஆக, சுக்கிரனின் தோஷம் நீங்கி அருள்பெற, வழிபட வேண்டிய மூர்த்தி, கஞ்சனூரில் உள்ள ஸ்ரீஅக்னீஸ்வரர். வெள்ளிக்கிழமை நாளில், வெண்ணிற மலர்களால் மாலை சூட்டியும், அர்ச்சித்தும் இவரை வழிபட்டால், சுக்கிர தோஷம் நீங்குகிறது என்பது பக்தர்களின் அனுபவம்.

இந்தக் கோயிலில் உள்ள கல்நந்திதான், புல் தின்ற அதிசயத்தை நிகழ்த்தியது. அதற்குக் காரணமான ஹரதத்த சிவாச்சாரியார் இங்குதான் வாழ்ந்தார். இந்தப் பெருமானைத்தான் பூஜித்து வந்தார்.

அக்னீஸ்வரர் கோயிலில் தத்தர், அவர் பத்னி, மூன்று குமாரர்கள் ஆகியோருக்கு செப்புத் திருமேனிகள், திருவிழாவுக்கு எடுத்துச் செல்ல உபயோகத்தில் உள்ளன. ஊரிலிருந்து காவேரிக்குச் செல்லும் வழியில் தத்தருக்கு ஒன்றும் சிறு கோயில் அமைந்துள்ளது.

தத்தரைப் பற்றி பவிஷ்ய புராணத்தில் 54 முதல் 65 வரையான அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. அக்னீஸ்வரர் கோயிலில், தத்தர் அக்னி பீடத்தில் அமர்ந்த செப்புப் படிமம் அமைந்துள்ளது.

96 வயது வரை வாழ்ந்து, தைமாதம் வசந்த பஞ்சமி (சுக்லபக்ஷம்) தினத்தில், தன் குடும்பம், பக்தர்கள் சகிதம், அப்போது வந்த தெய்விக விமானத்தில் ஏறி கைலாசம் சென்றார் ஹரதத்தர். ஆண்டு தோறும் வசந்த பஞ்சமி அன்று அவரது ஆராதனை இக்கோயிலில் சிறப்பாக நடந்து வருகிறது.



சுக்கிர ஸ்தலமான இந்த கஞ்சனூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதிகள் நிரம்ப உண்டு.

தரிசன நேரம்: காலை 7.30 முதல் 12 வரை; மாலை 4.30 முதல் இரவு 9 வரை.

Comments